New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கின் போர் சூழல்: அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்...

News

மத்திய கிழக்கின் போர் சூழல்: அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி!

April 12, 2026 1:34 pm
மத்திய கிழக்கின் போர் சூழல்: அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற முக்கியத்துவமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவும் ஈரானும் எந்த ஒப்பந்தத்தையும் எட்ட முடியாமல் போயுள்ளது. 21 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தைகளில், வாஷிங்டனின் நிபந்தனைகளை தெஹ்ரான் ஏற்க மறுத்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த உயர்மட்ட சந்திப்பு, 1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்கு பிறகு அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த மிக முக்கியமான பேச்சுவார்த்தையாகும்.

“நாம் எந்த ஒப்பந்தத்தையும் எட்டவில்லை என்பது மோசமான செய்தி. ஆனால் அது அமெரிக்காவுக்கு விட, ஈரானுக்கே அதிகம் பாதகமானது,” என்று ஜேடி வேன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,
“ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்றும், அதற்கான தொழில்நுட்ப வசதிகளையும் தேடாது என்றும் உறுதிப்படுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தை தொடருமா?

அல் ஜசீரா ஊடகத்தின் வாஷிங்டன் நிருபர் ஜான் ஹென்ட்ரென் தெரிவித்ததாவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக ஜேடி வேன்ஸ் - ஐ அனுப்பியிருப்பது, இந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா மிகவும் முக்கியமாக எடுத்துக்கொண்டதை காட்டுகின்றது.

அவர் மேலும் கூறியதாவது:

ஜேடி வேன்ஸ் வெளியேறியதால் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என அர்த்தமில்லை.
பேச்சுவார்த்தைகள் ஆன்லைன் வழியாக தொடர வாய்ப்பு உள்ளது
முக்கிய பிரச்சினைகள்:
ஹோர்முஸ் ஜலசந்தி மீது ஈரானின் கட்டுப்பாடு.
அணு ஆயுத விவகாரத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள்.

அமெரிக்கா, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கமாட்டோம் என்று மட்டும் அல்லாமல், அதற்கான தொழில்நுட்பங்களையும் அணுக முயற்சிக்க கூடாது என வலியுறுத்தி வருகிறது. இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2010களில் நடந்த பேச்சுவார்த்தைகளும் பல ஆண்டுகள் எடுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஆனல், இரு தரப்பினருக்கும் இடையே ஏராளமான செய்திகளும், தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பல விவகாரங்களில் ஒரு புரிதலை எட்டியுள்ளன. அதே வேளையில் இரண்டு முதல் மூன்று முக்கியமான விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஒரே ஒரு சந்திப்பிலேயே ஒரு முழுமையான ஒப்பந்தத்தை எட்டிவிட முடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்பது இயல்பானதே. வேறு யாரும் கூட அத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை."

இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது எதிர் தரப்பின் தீவிரத்தன்மை மற்றும் நம்பிக்கையை சார்ந்துள்ளது. ஈரானின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் அங்கீகரிக்கப்படுவதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தம் ஏற்படும். இப்போது பந்து அமெரிக்காவின் கைகளில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் ஈரானுக்கு எந்த அவசரமும் இல்லை" என்று கூறினார்.

இது தொடர்பில் கானாவில் உள்ள ஈரான் தூதரகமானது வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா தனது துணை அதிபரை இஸ்லாமாபாத்திற்கு விமானத்தில் அனுப்பியது. 21 மணி நேரப் பேச்சுவார்த்தையில், போரின் மூலம் அடைய முடியாத அனைத்தையும் அவர்கள் கோரினர். ஆனால், ஈரான் இல்லை என்று கூறிவிட்டது. பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் மூடப்பட்டுள்ளது. ஜேடி வேன்ஸ் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார். மீண்டும் ஈரானின் வார்த்தை மட்டுமே முக்கியமானது. மானத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு வேறு வழியே இல்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now