New Updates! Fresh news just arrived.

கொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் ...

News

கொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!

March 21, 2026 3:40 pm
கொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய பெண் விரிவுரையாளர் ஒருவரை அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டவரது சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திலீபன் தயாளினி (வயது 54) என்னும் விரிவுரையாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணவன் மனைவி இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையினுடைய கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரினுடைய மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்விலுள்ள அவர்களது வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு ஊடாக வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடியும் ஆதாரமாக காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியிலுள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.

இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளினை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளினை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களினை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளினை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண்ணை மருமகன் கழுத்து நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரது சடலத்தினை எடுத்து சென்று யாழ்ப்பாணம் - தனங்கிளப்பு, அறுகு வெளி பகுதியிலுள்ள புதருக்குள் வீசியதாக வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த சடலம் நீண்ட நேர தேடுதலின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலமானது உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் காணப்படுவதினால் சடலத்தினை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now