New Updates! Fresh news just arrived.

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதன் மூலமே ...

News

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்: கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்!

May 13, 2026 3:21 pm
தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்: கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்!
தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவொரு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றினை கலந்துரையாடலின் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்; எனவே எமது வெற்றியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (12) காரமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிகாரிகள் இன ரீதியிலான முரண்பாடுகளினை தவிர்த்து, இப்பிரதேசத்தின் மக்கள் தங்களுடைய அதிகாரப் பொறுப்பிற்கு உட்பட்டவர்கள் என்கின்ற அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளினை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். அதேபோன்று மக்களும் உரிய மற்றும் நியாயமான முறையில் அதிகாரிகளினை அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதுவே பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வினை பெற்றுத்தரும்.

அதிகாரிகளுடன் முரண்பட்டு எமது பிரச்சினைகளினை தீர்க்க முடியாது என்பதினை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று அரசியல் தலைமைகளும் குறித்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன ரீதியான முரண்பாடுகளினை உருவாக்கி எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதினை புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காரமுனை மக்கள் தமது பிரதேசத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளினையும் பாராளுமன்ற உறுப்பினரினுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். தாஹிர், ஜே.எம். முனாபீர் மற்றும் கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரான என்.எம். அனஸ், ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரான தாஜுடீன், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now