New Updates! Fresh news just arrived.

அரசாங்கத்தின் பாராமுகத்தால் குடிநீர் இன்றி தவிக்கும் நாவி...

News

அரசாங்கத்தின் பாராமுகத்தால் குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்: மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தவிசாளர் காட்டம்!

September 1, 2026 5:05 pm
அரசாங்கத்தின் பாராமுகத்தால் குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்: மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தவிசாளர் காட்டம்!
நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான வீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் 18 வருடங்களுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிநீர் தாங்கியின் பணிகள் நீண்டகாலமாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் வரட்சியான காலநிலை தொடர்ந்து வருவதாலும் மக்களின் குடிநீர் வசதிகள் அரைகுறையாகவே நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதாந்த பிரதேச சபை கூட்டத்தொடரில் சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுத்துக்கூறினார்.

நாவிதன்வெளி பிரதேச மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்தியமுகாம் பிரதான வீதியில் குடிநீர் தாங்கி அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக ஏ.எல்.எம். அதாஉல்லா பதவி வகித்த காலத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காலத்தில் இதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை எதிர்பார்த்த வேகத்தில் இடம்பெறவில்லை. கடந்த கால அரசாங்கங்களிலும் மந்தகதியில் இடம்பெற்ற இந்நிர்மாணப் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் உரிய வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் குறித்த வேலைத்திட்டத்தை 2026 ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டியிருந்த போதிலும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொள்ளும்போது அந்த காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

நாவிதன்வெளி ஒரு குடியேற்றப் பிரதேசமாகும். இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக குடிநீர் தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் தாங்கி நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

போதிய குடி நீர் இல்லை இரவு வேளைகளில் மாத்திரம் குறைந்தளவு குடிநீர் வருவதாக மக்கள் தவிசாளரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்திருந்தார். நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலையால் மேலும் நாவிதன்வெளி பிரதேசம் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடந்த கால அரசுகளை போன்று இந்த அரசாங்கமும் எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினையை பாராமுகமாக இருக்க கூடாது. நீர் அனைத்து உயிர்களுக்குமான தேவை .

அரசாங்கம் எமது மக்களின் அத்தியாவசிய தேவையை அரசியலாக பார்க்காமல் அன்றாட தேவையாக கருதி நீர் தாங்கியின் பணியினை பூர்த்தி செய்ய வேண்டும் இக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். அத்தோடு கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உறுதியளித்த படி நாவிதன்வெளி பிரதேசத்தில் 16 கிலோமீட்டர் குடிநீர் வசதிகள் அற்ற பகுதிகளுக்கு புதிய குடி நீர் குழாய்கள் பொருத்தி வழங்கப்பட வேண்டும் என தவிசாளர் விடுத்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முதற்கட்டமாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தபடும் என மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. நளீர் தொடர்ந்தும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now