New Updates! Fresh news just arrived.

பொத்துவில் கனகர் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்! - Gu...

News

பொத்துவில் கனகர் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

March 24, 2026 12:55 pm
பொத்துவில் கனகர் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கனகர் கிராம மக்களின் காணியினை வனப் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து மீட்டுத் தருமாறு கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான ஐந்து வருட போராட்டத்தை தொடர்ந்து கனகர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தினால் 202 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாக இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசு விடுவித்த கனகர் கிராம மக்களின் காணியை பகிர்ந்தளிப்பதற்காக 202 பேர்களுடைய பெயர் விபரம் பரிந்துரைக்கப்பட்டு பொத்துவில் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இருந்த போதிலும் 2023 ஆண்டு அதில் 73 குடும்பங்கள் முதல் கட்டமாக குடியமர்த்தபட்டுள்ளதாகவும் மீதியாக உள்ள எமக்கு குடியிருப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசாங்கம் விடுவித்த எமது காணியில் நாம் மீள் குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியுடன் அரசாங்கம் விடுவித்த எமது காணியை எமக்கு கையளிக்குமாறு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்

முதலாம் கட்டமாக 73 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு 03 வருடங்கள் கடந்த நிலையில் இன்று வரை அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை அவர்கள் பெரும் கஷ்டத்தின் மத்தியில் அடிப்படை வசதிகளற்று இன்று வரை வாழ்ந்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கனகர் கிராம மக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இந்தக் காணியை பெறுவதற்காக விண்ணப்பித்த எஞ்சிய 129 பேர்களில் சிலருக்கு இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்திற்கான நேர்முகப் பரிட்சை கடந்த வருடம் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போதிலும் இதுவரை எந்த முடிவுகளும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இவர்கள் சுட்டிக்காட்டியதோடு சேனைப் பயிர்செய்கைகளை வாழ்வாதாரமாக நம்பி வாழும் கனகர் கிராம மக்களுக்கான இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை அடிப்படை வசதிகளுடன் விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அரசினால் விடுவித்த தமது காணிகளை தமக்கு கையளித்து மீள்குடியேற்றுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதே போன்று மூன்று வருடங்கள் ஆகியும் மீள்குடியேற்றப்பட்ட 73 குடும்பங்களின் அடிப்படை வசதிகளை இனியும் காலம் தாழ்த்தாது துரிதப்படுத்துவதுடன் இரண்டாம் கட்டத்திற்காக காத்திருக்கும் எமது காணிகளை கையளிக்குமாறு அரசிடமும் உரிய அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

23.03.2026 நேற்று காலை 10 மணியளவில் கனகர் கிராமத்தில் உள்ள இவர்களின் காணிப்பகுதியில் அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதிக்கு முன்பாக வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தியவாறு இவர்களின் காணி மீட்புக்கான இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தைஸதொடர்ந்த இவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் கனகர் கிராமத்தில் விடுவிக்கப்பட்ட் 202 ஏக்கர் காணிப் பகுதியில் எமக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் கடற்கரை காணி விடுவிக்கப்படவில்லை அதற்குள் தங்களால் எந்தவொரு பணியையும் செய்ய முடியாமல் தடுத்து வரப்படுகிறோம்.
அது தொடர்பாக நாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த காணி தொடர்பான தகவல்களை கேட்டு விண்ணப்பித்தும் உள்ளோம் எனவே எமது இந்த கனகர் கிராம கடற்கரை காணி தொடர்பாக தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி தமக்கு கருணை காட்டி எமது வாழ்வாதாரத்திற்காக இந்த காணியை விடுவித்து தம்மை குடியமர்த்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கும் கருத்து ஒன்றையும் தெரிவித்தனர்.

எமது காணி எமக்கு வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோசங்களோடு முன்னெடுத்த இந்தப் போராட்டம் 23.03.2026 நேற்று காலை 10 மணியில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு குழுவினர் பொத்துவில் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

இது குறித்து பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அகமட் நஸீல் தெரிவிக்கையில்...

கனகர் கிராம மக்களினால் மகஜர் ஒன்று இன்று (23) என்னிடம் கையளிக்கப்பட்டது .
கனகர் கிராமத்தில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற மக்களுக்காக நாங்கள் 176 பேருக்கான 202 ஏக்கர் காணியினை வனப் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து மீட்டு ஒருவருக்கு தலா ஒரு ஏக்கர் 20 பேஜ் என்ற வகையில் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிந்ததாகவும் அதில் முதற் கட்டமாக 73 பேரை கனகர் கிராமத்தில் மீள் குடியமர்த்தியுள்ளதாகவும் அதே போன்று இரண்டாம் கட்டத்திற்கான நேர்முக தேர்வுக்காக மீதியுள்ளவர்களை அழைத்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் தகமைகளையும் பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகவும் குறித்த பரீசிலனையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த இரண்டாம் கட்ட நேர்முகத்திற்கு விண்ணப்பித்தவர்களினாலேயே இன்று மகஜர் ஒன்று தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அவதாரம் செலுத்தி இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்தவர்களுக்கான வீடு உட்கட்டமைப்பு வசதி காணிகள் போன்ற பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now