New Updates! Fresh news just arrived.

கத்தார் விமான சேவைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு - ...

News

கத்தார் விமான சேவைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

March 7, 2026 1:55 pm
கத்தார் விமான சேவைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த கத்தார் வான்பரப்பை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பகுதியளவில் திறக்க கத்தார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், முதல் தடவையாகக் கத்தார் வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது. எனினும், இது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சரக்கு பரிமாற்ற (Cargo) விமானங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் கத்தாரின் பிரதான சர்வதேச விமான நிலையமான ஹமாட் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் (Drone) தாக்குதலை நடத்தியிருந்தது. எனினும், கத்தார் பாதுகாப்புப் படையினரால் அந்தத் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு, ஏனைய சிவில் விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஹமாட் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் வளைகுடா நாடுகளின் வான்பரப்புகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கத்தாரின் இந்த நடவடிக்கை சர்வதேச விநியோகச் சங்கிலியைச் சீர்செய்யும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now