New Updates! Fresh news just arrived.

மீண்டும் QR முறையா?: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின...

News

மீண்டும் QR முறையா?: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் அறிவிப்பு!

March 2, 2026 6:09 pm
மீண்டும் QR முறையா?: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் அறிவிப்பு!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையினை பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தினை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்புள்ளதால் QR முறையினை பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் QR முறையினைபயன்படுத்தத் தயாராகயிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நேற்றையதினம் (01) மாத்திரம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 39 இலட்சத்து 20 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று (02) வழமை போன்று எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாகவும், காலை 9.45 மணி வரை 29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும் மற்றும் 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டதாக டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தொடர்ச்சியாக எரிபொருளினை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவுன்றும், அதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்கள் இவ்வாறு அநாவசியமாகப் பதற்றமடைந்து தொடர்ச்சியாக வரிசைகளில் காத்திருப்பது வருத்தமளிப்பதாகவும், அனுமதிப்பத்திரம் இன்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான செயலாகும் என்றும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டி.ஜே. ராஜகருணா இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இது தொடர்பில் நேற்றையதினமும் (01) பொலிஸாரினால் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றினையும் விடுத்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now