New Updates! Fresh news just arrived.

பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி ...

News

பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி வழங்க தீர்மானம்!

June 11, 2026 10:20 pm
பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி வழங்க தீர்மானம்!
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருந்த பொன்னன்வெளிக் கண்டம் 1982 ஆம் ஆண்டில் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக 200 முஸ்லிம் விவசாயிகள் காணிகளை இழந்துள்ள நிலையில் 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் விரைவில் அதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை அனுப்பி வைப்போம் என பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொன்னன்வெளிக் கண்டத்தில் காணியினை இழந்த 200 விவசாயிகளுக்கு பதில் காணியினை வழங்குமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை காணி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தனது முன்மொழிவினை முன்வைத்துள்ளார்.

காணி அமைச்சின் செயலாளர் பொன்னன்வெளியில் காணி இழந்தவர்களுக்கு பால்கேணியில் பதில் காணி வழங்குவதற்கு வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள காணியினை வனப்பாதுகாப்பு திணைக்களம் விடுவித்தால் பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி வழங்குவதற்கு காணி அமைச்சின் செயலாளரினால் அறிக்கை சமர்ப்பிக்கபட்டிருந்தது.

இதன்படி, சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (10) பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சுற்றாடல் அமைச்சர் பேராசிரியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில், பொன்னன்வெளியில் காணி இழந்த 200 விவசாயிகள் தங்களின் காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்களை வைத்துள்ளனர்.

பொன்னன்வெளியில் காணி இழந்தவர்களில் பலர் பதில் காணி கிடைக்காத நிலையில் மரணித்து விட்டனர். அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், அம்பாறை மாவட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் காணிகள் விடுவிக்கும் விசேட கூட்டத்திலும் பொன்னன்வெளியில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணிகள் வழங்குவதற்கு முதற்கட்டமாக பால்கேணி வட்டையில் 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொண்ட போதும் இதுவரை உத்தியோகபூர்வமான முறையில் காணி விடுவிப்பு தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளரினால் எந்தவிதமான அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை

எனவும் முதற்கட்டமாக இக்காணியினை விடுவித்து பொன்னன்வெளியில் காணி இழந்தவர்களுக்கு பதில் காணி வழங்குவதுடன் காணி இழந்தவர்கள் எல்லோருக்கும் பதில் காணி வழங்குவதற்கு பொருத்தமான காணியினை விடுவிப்பதற்கு வனப்பாதுகாப்புத் திணைக்களம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரை பதிலளிக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார். வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பதிலில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள பால்கேணி வட்டையில் 20 ஏக்கர் குத்தகை அடிப்படையில் இலங்கை இராணுவத்திற்கு வழங்கியுள்ளதாகவும் மிகுதியாக உள்ள 38 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் விரைவில் அதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை அனுப்பி வைப்போம் என்றும் பதிலளித்தார்.

இது தொடர்பாக சிறந்த நடவடிக்கையை மேற்கொண்ட அமைச்சர் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் மக்கள் சார்பில் நன்றியினை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now