New Updates! Fresh news just arrived.

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் க...

News

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

February 15, 2026 5:03 pm
சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனது கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டபோது, சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நேரடியான அச்சுறுத்தலாகும் என வலியுறுத்தப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய கொடூரச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் ஆயுத கலாச்சாரத்தை முற்றாக ஒழித்து நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சட்டத்துறையின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையில் கொழும்பு நகரிலுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் அமைந்திருக்கும் கலாநிதி எச்.டபிள்யூ. ஜயவர்தன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறுகின்ற கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதிருந்தாலும், அதற்கு தங்களினுடைய முழுமையான ஆதரவினை வழங்குவதாக சம்மாந்துறை கிளை அறிவித்துள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் சம்மாந்துறையினுடைய சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.ஏ. சியாத், பொருளாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாமிலா மன்சூர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச். அரூஸ் அடங்கலாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சம்மாந்துறை கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now