New Updates! Fresh news just arrived.

இறக்காமத்தில் சமுர்த்தி விசேட வீடு திறந்து வைப்பு : “ஆரோக...

News

இறக்காமத்தில் சமுர்த்தி விசேட வீடு திறந்து வைப்பு : “ஆரோக்கிய வசதியுடனான வீடு - வலுவான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு!

August 17, 2026 11:51 am
இறக்காமத்தில் சமுர்த்தி விசேட வீடு திறந்து வைப்பு : “ஆரோக்கிய வசதியுடனான வீடு - வலுவான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு!
இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், 2025/2026ஆம் ஆண்டிற்கான சமுர்த்தி விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடு திறந்து கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவின் 05ஆம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சமுர்த்தி விசேட வீடு, சமூக வலுவூட்டல் மாதத்தை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டது. முகாமைத்துவப் பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட நிர்வாக முகாமையாளருமான ஏ.எல்.நெளபீர் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள ரத்ணாயக்க, “ஆரோக்கிய வசதியுடனான வீடு – வலுவான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் குறித்த வீட்டை திறந்து வைத்து பயனாளியிடம் கையளித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மிகவும் வறுமை நிலையில் பிள்ளைகளுடன் வாழும் அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு வீடு நிர்மாணிப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவியுடன் பயனாளியின் பங்களிப்பும் இணைக்கப்பட்டு வீடு பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சார்பில் 10,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியும் பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் அய்மா நிஹ்மத்துல்லாஹ், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஏ.மர்சூக், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எல். உம்மு ஜூனைதா, கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.எம்.யூ.என். குமார, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம்.எம்.நப்ரிஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.எல். அலிசப்ரி, இணைப்புச் செயலாளர் ஏ.கே.அஸ்வர், வலய உதவி முகாமையாளர் ஏ. நியாஸ் மெளலவி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். மக்பூல், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.பஸீர், கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.அத்தீக் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான வீடுகளை வழங்குவதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, குடும்பங்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now