New Updates! Fresh news just arrived.

ஆசிரியர்களுக்கான ‘மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுக...

News

ஆசிரியர்களுக்கான ‘மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுகளை கையாளுதல்’ செயலமர்வு!

September 17, 2026 12:50 pm
ஆசிரியர்களுக்கான ‘மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுகளை கையாளுதல்’ செயலமர்வு!
பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல், கல்வி மற்றும் சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை உரிய முறையில் கையாள்வதற்கான அறிவு மற்றும் திறன்களை ஆசிரியர்களுக்கு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுகளை கையாளுதல்’ தொடர்பான செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வு, இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மனநல வைத்தியர் யூ.எல். சராப்டீன் இச்செயலமர்வின் வளவாளராகக் கலந்து கொண்டு, மாணவர்களின் உள ஆரோக்கியம், அவர்களின் நடத்தை மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகள், மாணவர்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைச் சுமுகமாகக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்களுடன் செயற்பாட்டு ரீதியாக கலந்துரையாடினார்.

இதன்போது ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றை உரிய முறையில் கையாள்வதற்கான ஆலோசனைகளும் தீர்வுகளும் வளவாளரினால் வழங்கப்பட்டன.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் அபிவிருத்திப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளரும், இறக்காமம் பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம்.எம். சியாட் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் நடைபெற்ற இச்செயலமர்வு, அம்பாறை மாவட்ட செயலகத்தின் மாவட்ட உளச்சமூக உத்தியோகத்தர் யூ.எல். அஸார்டீன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். ஜெகநாதன் மற்றும் இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எம்.ஐ. பஸீனா, எம்.எச். வஹாப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மேலும், பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா, மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் சுவர்னா ஹேமலதா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now