New Updates! Fresh news just arrived.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்...

News

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்: யாழ் மாவட்ட மீனவ சமாசம் தெரிவிப்பு!

July 24, 2026 7:40 pm
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்: யாழ் மாவட்ட மீனவ சமாசம் தெரிவிப்பு!
எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீன்பிடிப் படகுகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என்று யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களினுடைய சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டத்தின் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த விடயத்தினை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களினுடைய வாழ்வாதாரத்தினை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர்.

இந்திய மீனவர்களினுடைய இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாட்டை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறியுள்ளது.

இதன்படி, தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின்னர் இந்திய மீனவர்கள் அதிகளவில் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு, அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட எமது மீனவர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி பெறுமதியான வலைகளினை அறுத்து நாசம் செய்தனர்.

இந்திய மீனவர்களினுடைய தொடர்ச்சியான வருகை எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பது மட்டுமல்லாது மீனவ தொழிலிலிருந்து வேறு தொழில்களுக்கு செல்வதற்கும் நிர்ப்பந்தித்துள்ளது .

இலங்கை கடற்படையிடம் வினையமாக கேட்கின்றோம் எல்லை தாண்டுகின்ற இந்திய மீனவர்களினை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டாவது அவர்களினுடைய வருகையை கட்டுப்படுத்துங்கள்.

எங்களினால் இனியும் பொறுமைகாக்க முடியாது நாட்டினுடைய ஜனாதிபதியையும் துறைசார் அமைச்சரினையும் சந்தித்து எமது கோரிக்கையினை தெளிவாக கூற இருக்கின்றோம்.

சட்டத்தினை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை எனவே எமது கடற் பகுதியினை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடமுள்ள நிலையில் எல்லை தாண்டுகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now