New Updates! Fresh news just arrived.

நாட்டில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - அறிமுகமா...

News

நாட்டில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - அறிமுகமாகிறது புதிய திட்டம்

February 25, 2026 1:58 pm
நாட்டில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - அறிமுகமாகிறது புதிய திட்டம்
பொறுப்புள்ள பிரஜைகளாக முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிப்பதற்கும் அவர்களைக் கௌரவிப்பதற்குமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட 'சலுகை அட்டை' முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் வரி செலுத்தும் பிரஜைகளுக்கு உபகாரமாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சலுகை அட்டையைப் பெறுவதற்கான தகுதிகள்

பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர் வரி செலுத்துவோர் மட்டுமே இந்த அட்டையைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.

முந்தைய மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தொகையை முழுமையாகவோ அல்லது மேலதிகமாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.

வருமான வரி அறிக்கையை குறித்த ஆண்டின் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பித்திருக்க வேண்டும்.

அனைத்து வரிப் பணமும் (சுய மதிப்பீட்டு கொடுப்பனவுகள் உட்பட) உரிய திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

வரி செலுத்துவோரின் கடந்தகால வரி வரலாறுகள் திருப்திகரமாக அமைந்திருக்க வேண்டும்.

அட்டை வகைகள்

வரி செலுத்தும் தொகையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் இந்த அட்டைகள் வழங்கப்படுகின்றன.

தங்க அட்டை: முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் 5 மில்லியன் ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வருமான வரியாகச் செலுத்தியவர்களுக்கு இது வழங்கப்படும்.

வெள்ளி அட்டை: முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் 3 மில்லியன் ரூபா முதல் 5 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான தொகையை வரியாகச் செலுத்தியவர்களுக்கு இது வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ளவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக வருமானக் கண்காணிப்பு பிரிவின் ஆணையாளருக்கு அனுப்ப வேண்டும்.

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கை சமர்ப்பிக்கும் காலம் 2025.12.31 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், சலுகை அட்டைக்கான விண்ணப்பங்கள் 2026.02.28 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பத்துடன் வருமான வரி அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதி, T-10 சான்றிதழின் பிரதி (தேவையெனில்) இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது rm@ird.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அனைத்துத் தகுதிகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின் 3 வாரங்களுக்குள் சலுகை அட்டை விநியோகிக்கப்படும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now