New Updates! Fresh news just arrived.

நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்ப...

News

நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

April 28, 2026 6:32 pm
நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தாய் சேய் சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றின் சேவைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் கலந்து கொண்டு, பிரதேச மக்களின் சுகாதார தேவைகள் மற்றும் நிலையங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.

குறிப்பாக நிந்தவூர்-22 மற்றும் நிந்தவூர்-11 பிரிவுகளில் அமைந்துள்ள தாய் சேய் சுகாதார நிலையங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அங்கு வழமையாக இடம்பெற்று வந்த கிளினிக் சேவைகள் தற்காலிகமாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அட்டப்பள்ளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் குறித்த சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையை கருத்திற் கொண்டு, உடனடியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் குறித்த நிலையங்களின் நிலுவைப் பட்டியல்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த கட்டிடங்களை தொடர்ச்சியாக பராமரித்து சேவைகளை இடையூறு இன்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவதானிக்கப்பட்டன.

மேலும், குறித்த சுகாதார நிலையங்களின் பெளதீக சூழலில் காணப்படும் திருத்தப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அவை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபை தனது முழுமையான கவனத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் கண்காணிப்பு சிறப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் மாஹிர், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் சுல்பிகார், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஷ்ட சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

பொதுமக்களின் சுகாதார சேவைகள் இடையூறு இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now