New Updates! Fresh news just arrived.

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர் சேவைகள் மேம்பாட...

News

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர் சேவைகள் மேம்பாட்டிற்கு விசேட வேலைத்திட்டம்!

May 21, 2026 5:15 pm
தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர் சேவைகள் மேம்பாட்டிற்கு விசேட வேலைத்திட்டம்!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் தலசீமியா நோயைக் கட்டுப்படுத்தவும், நோயாளர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வருங்கால சந்ததியினரை தலசீமியா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் விரிவுபடுத்துவதோடு, நோயாளர் பராமரிப்பு சேவைகளையும் நவீனமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலை, பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம். பௌஷாத் ஒருங்கிணைத்திருந்தார்.

மேலும், பிராந்திய தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். ஹில்மி, பிராந்திய பொதுச் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம். அஜ்வத் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் EHED Caritas பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் தலசீமியா நோயால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், நோயாளர்களுக்கான மருத்துவ கவனிப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளை தற்போதைய நிலையை விட மேலும் தரமுயர்த்துதல் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதேவேளை, பிராந்திய மட்டத்தில் தலசீமியா பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் திட்டங்களை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. நோய் கண்டறியப்பட்ட பின்னர் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் நவீன மருத்துவ நடைமுறைகளுக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தலசீமியா பாதிப்பற்ற, ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு பயனுள்ள திட்டமிடல்களுடன் இக்கலந்துரையாடல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now