New Updates! Fresh news just arrived.

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சை குறித்து இலங்கை...

News

தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!

January 26, 2026 3:07 pm
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!
கல்வியமைச்சின் 2025.11.11ஆந் திகதி ED/09/12/02/02/05(I) இலக்க கடிதத்திற்கு முரணாக கல்வியமைச்சினதோ அல்லது வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி முறையற்ற விதமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சையை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்களின் செயற்பாடுகள் குறித்தும் - அரச கரும நேரத்தை மற்றும் அரச வளத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை, அனுமதி பெறாமல் அரசசார்பற்ற நிறுவனத்துக்கு முறைகேடாக நிதி வழங்கியமை குறித்தும் விரிவான விசாரணையொன்றை முன்னெடுக்குமர்று வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக அரசார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களிலிருந்து விலகி, வெறுமனே பரீட்சைகள் மூலம் இலபமீட்டும் நோக்கில் - முறைகேடுகள் நிறைந்த நிறுவனமாக செயற்பட்டுவருகிறது.

அந்நிறுவனத்தின் முறையற்ற செயன்முறைகள், பாடசாலைகளில் செயற்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துமாறு எழுத்துமூலமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.

முறைகேடுகள் நிறைந்த குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் பாடசாலைகளில் ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு மேற்கொண்டதன் அடிப்படையில், குறித்த நிறுவனத்தினால் பாடசாலைகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் முறையற்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது என வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்வி திணைக்களம் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் இணக்கப்பாட்டை எட்;டியிருந்தன.

ஆயினும் - அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை சில அரச பாடசாலை அதிபர்கள், குறித்த நிறுவனத்துக்கு பரீட்சைக் கட்டணத்தினையும் செலுத்தி பாடசாலை நேரத்தில் முறையற்ற விதமாக செயற்படுத்துகின்றனர்.

குறித்த நிறுவனத்தின் பரீட்சைகள் பாடசாலை நேரத்தில் நடத்தும் போதும் - வடமாகாண கல்வியமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதானது வடமாகாண கல்வி அதிகாரிகள் மட்டில் எமக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

சகல வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் 31.12.2025ஆந் திகதியும் NP/20/ED/Thirteen/01/2025 இலக்க வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடித மூலம் , தரம் 12 (2027 Batch)) முதலாம் தவணைப் பரீட்சை என்ற தலைப்பில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாடசாலைகள் இயங்காததால் மாணவர்களுக்கான பாடத்திட்ட முன்னேற்றம் பாடசாலைக்கு பாடசாலை வேறுபடுவதனால் தரம் 12 இற்கான முதலாம் தவணைப் பரீட்சையை பாடசாலை மட்டத்தில் கணிப்பீட்டு முறையில் நடாத்தி பின்னூட்டலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் - சில பாடசாலைகள் தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் (F.W.C) எனும் வினாத்தாள் விற்பனை செய்யும் அரச சார்பற்ற நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி வினாத்தாள்களைப் பெற்று, பாடசாலை நேரத்தில் காணப்படும் அதன் நேர அட்டவணைக்கமைய அரச வளங்களைப் பயன்படுத்தி அதன் பரீட்சைகளை நடாத்திக் கொண்டிருப்பதும், வடமாகாண கல்வி அதிகாரிகள் அதனைக் கட்டுப்படுத்தாமல் செயற்படுவதும் சட்டவிரோதமான செயற்பாடாகும்.

மேலும், 2024ஆம் ஆண்டு தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சை யாஃ மானிப்பாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கை ஆசிரியர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், வடமாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய, வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த முறையற்ற விதமாக நடத்தப்பட்ட பரீட்சை நிறுத்தப்பட்டமையை உறுதிப்படுத்தி 07.08.2024 ஆந் திகதிய NP/41/20/3/8/Gen இலக்க கடிதத்தின் மூலம் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதே முறையற்ற செயற்பாடுகள் இன்றும் தொடருகின்றன.

குறித்த அரச சார்பற்ற நிறுவனமான தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தினரின் முறையற்ற செயற்பாடுகள் அரச பாடசாலைகளில் தலையீடு செய்வது குறித்து பல ஆண்டுகளாக பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதும், அவற்றின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தாமல் வடமாகாண கல்வித் திணைக்களமும் வடமாகாண கல்வியமைச்சும் செயற்பட்டு வருவதை, குறித்த முறைகேடுகளுக்கு உடந்தையான செயற்பாடுகளாகவே நாம் கருதுகின்றோம். இலாப நோக்கம் கொண்ட குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் மூலம் வடமாகாண அதிகாரிகள் சிலரும் இலாபங்களை சம்பாதிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும், கல்வியமைச்சின் 2025.11.11ஆந் திகதி ED/09/12/02/02/05(I) இலக்க கடிதத்திற்கு முரணாக கல்வியமைச்சினதோ அல்லது வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி முறையற்ற விதமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சையை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்களின் செயற்பாடுகள் குறித்தும் - அரச கரும நேரத்தை மற்றும் அரச வளத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை, அனுமதி பெறாமல் அரசசார்பற்ற நிறுவனத்துக்கு முறைகேடாக நிதி வழங்கியமை குறித்தும் விரிவான விசாரணையொன்றை கோரி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now