New Updates! Fresh news just arrived.

அரசியல் இலாபத்திற்காக இலங்கை தமிழ் மீனவர்கள் மற்றும் இந்த...

News

அரசியல் இலாபத்திற்காக இலங்கை தமிழ் மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் மோதவிடப்படுகிறார்கள்: வேந்தன் ஆதங்கம்!

May 3, 2026 5:32 pm
அரசியல் இலாபத்திற்காக இலங்கை தமிழ் மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் மோதவிடப்படுகிறார்கள்: வேந்தன் ஆதங்கம்!
காலங்காலமாகத் தொடரும் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், நாளுக்கு நாள் அதன் தீவிரம் அதிகரித்துச் செல்வதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த மே முதலாம் திகதி 'ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி' ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தீர்வில்லா தொடர் போராட்டங்கள்
ஆரம்ப காலம் முதலே மீனவர்கள் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், மீனவர்களின் பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. மாறாக, அவை பல மடங்கு அதிகரித்துச் செல்வது வேதனைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத மீன்பிடி மற்றும் எல்லைத் தாண்டும் பிரச்சினை
முக்கியமாக சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லைத் தாண்டல் குறித்தும் அவர் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார்

இது வெறும் மீனவர் பிரச்சினை மட்டுமல்ல, இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர பிரச்சினை.

இரு நாடுகளும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.

கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், "2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு - கிழக்கில் ஒரு நிழல் அரசாங்கம் இருந்தபோது இவ்வாறான பிரச்சினைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், இன்று சட்டத்தின் மூலம் மீனவர்களின் தினசரிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழலே நிலவுகிறது," என்றார்.

குறிப்பாக, இந்திய மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் ஒருவருக்கொருவர் மோதவிட்டு, அந்த மோதல்களை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று காணப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

"கடல் தொழிலாளர்களின் இந்த அவல நிலை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். அரசாங்கம் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

— வேந்தன், தலைவர் (ஜனநாயக போராளிகள் கட்சி)
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கடல் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் அரசாங்கம் துரித கதியில் செயற்பட வேண்டும் என்பதே இவரது பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now