New Updates! Fresh news just arrived.

தலைமன்னார் ரயில் சேவை: சிக்னல் பழுதால் சர்ச்சை..

News

தலைமன்னார் ரயில் சேவை: சிக்னல் பழுதால் சர்ச்சை..

July 25, 2026 9:19 am
தலைமன்னார் ரயில் சேவை: சிக்னல் பழுதால் சர்ச்சை..
பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தலைமன்னார் பாதையின் ரயில் சமிக்ஞை அமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவராமல், அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். "டித்வா (Ditwa) சூறாவளிக்குப் பிறகு ஒரு வருடம் ஆகப்போகும் நிலையிலும், தேவையான பயணிகள் வசதிகளை சீரமைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இந்நிலையில், பல மாதங்களாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த தலைமன்னார் பாதையில் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்குவதற்குத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரின் அறிவித்தலின் பேரில் இது உடனடியாகத் தொடங்கப்பட்டது என்ற செய்தியே வருகிறது. இருப்பினும், இத்தருணம் வரை பல ரயில் நிலையங்களின் அனைத்துச் செயற்பாடுகளும் நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே பயணம் மீண்டும் தொடங்கப்படுகிறது.

சமிக்ஞை அமைப்பு இன்னும் சீரமைக்கப்படவில்லை. ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மீண்டும் பாதுகாப்பற்ற முறையிலேயே ரயில்கள் இயக்கத் தொடங்கப்பட்டுள்ளன." என்றார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சுமேத சோமரத்ன,
"இதனைச் சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் ரயிலில் ஏறுமாறு அமைச்சர் எப்போதும் கூறுகிறார். ஆனால் தொழிற்சங்கங்களை ஏறுமாறு அவர் கூறுவதில்லை. நாங்கள் நல்ல ஆலோசனைகளையே வழங்குகிறோம்.. நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பேசவில்லை.. இதையெல்லாம் எடுத்துக்கூறியும்.. எங்களை எப்போதும் வெளியில் வைத்துவிட்டு.. எந்தவொரு சாதகமான பதிலையும் வழங்காமல் அவசர அவசரமாக ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளமைக்கு நாங்கள் எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்."

"மதவாச்சிக்கு அப்பால் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த சமிக்ஞை அமைப்பு தற்போது செயலிழந்துள்ள நிலையில், அதிகாலை வேளையிலேயே ரயில் பயணம் ஆரம்பமாகிறது. விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த நடைமுறைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?" என்று அவர் கோள்வி எழுப்பியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now