New Updates! Fresh news just arrived.

சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண...

News

சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது: உறுப்பினர் சஹாப்தீன் நளீம் குற்றச்சாட்டு!

June 9, 2026 9:25 pm
சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது: உறுப்பினர் சஹாப்தீன் நளீம் குற்றச்சாட்டு!
சம்மாந்துறை பிரதேச சபையின் தற்போதைய நிர்வாகம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும், பொதுச் சுகாதாரம், திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹாப்தீன் நளீம் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் இன்று (09) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதேச சபை கடந்த ஒரு வருட காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் நிரந்தரமான அல்லது நீடித்த எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான பொறுப்புகளில் ஒன்றான திண்மக்கழிவு அகற்றும் சேவை தற்போது சம்மாந்துறையில் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், “2018 முதல் 2023 வரை நாங்கள் உறுப்பினர்களாக இருந்த காலத்தில் திண்மக்கழிவு சேவை முறையாக முன்னெடுக்கப்பட்டது. சபை கலைக்கப்பட்ட பின்னரும் 2025 மே மாதம் வரை சேவை தொடர்ந்தது.

ஆனால் தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து பல பகுதிகளில் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன,” ஊரைச் சுத்தப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊரையே குப்பைக் காடாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்துல் மஜீத் மையவாடி, பலாஹ் மஸ்ஜித் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இது மாணவர்கள், பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் 2025 செப்டம்பர் மாதத்திலும் பின்னர் மீண்டும் சபையில் எழுத்து மூலமாகவும் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், இருந்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். “சமூக அமைப்புகளின் உதவியுடன் நான் நேரடியாக அந்தப் பகுதியை ஓரளவு சுத்தம் செய்தேன். ஆனால் இது பிரதேச சபையின் பொறுப்பு. மக்கள் தினமும் என்னிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

ஒவ்வொரு சபை அமர்விலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். “சபையில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. அபிவிருத்திக்கான நிதி இல்லை என்ற காரணம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

வீதிவிளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். “நகர்ப்புறங்களில் தேவைக்கு அதிகமாக மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில், விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தும் பாதைகளில் அடிப்படை ஒளிவசதியும் இல்லை,” என அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபை தற்போது மக்களுக்கான சேவை நிறுவனமாக இல்லாமல், ஒரு அரசியல் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்களை முன்னெடுக்கும் தளமாக மாற்றப்பட்டுள்ளது.



















































































“மக்களுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே சபை பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கான திட்டங்களோ, தொலைநோக்கு அபிவிருத்தி சிந்தனைகளோ இல்லை.

மீன் வியாபாரிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டிருந்தாலும், இன்றளவும் சந்தை முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும், மீன் விற்பனையாளர்கள் பிரதான வீதிகளில் சிரமத்துடன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கலந்து கொண்ட சம்மாந்துறை தவிசாளர், பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தித் தேவைகளை முன்வைக்கத் தவறியதுடன் “மற்ற உள்ளூராட்சி தலைவர்கள் தங்களது பிரதேசங்களின் முக்கிய அபிவிருத்தித் தேவைகளை முன்வைத்தனர். ஆனால் சம்மாந்துறை சார்பில் ஊழியர்களின் சம்பளத்திற்கான நிதி கோரப்பட்டது.

இது சம்மாந்துறையின் மிக முக்கிய பிரச்சினை அல்ல. அதேவேளை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.

பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஜனநாயக முறையிலும் உள்ளூராட்சி சட்ட விதிகளின்படியும் நிறைவேற்றப்படவில்லை. “வரவு–செலவுத் திட்டத்தில் என்ன உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதுகூட உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியான பழிவாங்கல் இடம்பெற்று வருகிறது.

மேலும், எதிர்க்கட்சியினர் வரவு–செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்தாலும், சம்மாந்துறை பிரதேச சபையில் அதற்கான மதிப்பு வழங்கப்படவில்லை

இறுதியாக, சம்மாந்துறை மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதற்கு தற்போதைய நிர்வாகம் ஊடகங்கள் முன்னிலையில் பதிலளிக்க வேண்டும்.

“மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று வரை மக்களுக்காக என்ன செய்துள்ளனர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சம்மாந்துறை மக்களின் நலனையும் எதிர்கால அபிவிருத்தியையும் முன்னிறுத்தும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது,” என அவர் தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now