New Updates! Fresh news just arrived.

மக்கள் எதிர்ப்பில் வீழ்ந்தது அநுர அரசாங்கம்! வலுசக்தி ஊழல...

News

மக்கள் எதிர்ப்பில் வீழ்ந்தது அநுர அரசாங்கம்! வலுசக்தி ஊழல் குறித்து சஜித்தின் அறிவிப்பு

April 21, 2026 2:04 pm
மக்கள் எதிர்ப்பில் வீழ்ந்தது அநுர அரசாங்கம்! வலுசக்தி ஊழல் குறித்து சஜித்தின் அறிவிப்பு
அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், இறுதியில் மக்கள் எழுச்சிக்கு முன்னால் தலைவணங்க நேரிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம, சுதுவெலி பெளஸ்ஸ பகுதியில் நேற்றையதினம்(20) நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வலுசக்தித் துறையில் நிலவும் நெருக்கடி குறித்து அவர் மேலும் கூறுகையில், “லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதை நாம் தொடர்ச்சியாகச் சான்றுகளுடன் நிரூபித்து வந்துள்ளோம்.

அரசு அதனை மறுத்து, அமைச்சரைக் காப்பாற்றப் நாடாளுமன்றத்தில் 153 வாக்குகளைப் பெற்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வென்றது. ஆனால், உண்மையான தரவுகளை நாம் மக்களிடம் கொண்டு சென்றதால் ஏற்பட்ட பலத்த எதிர்ப்பால், இறுதியில் அமைச்சரும் செயலாளரும் பதவி விலகல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றி" என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசு எரிபொருள் மாபியாவின் பங்காளியாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிய அவர், சர்வதேச சந்தை விலையை விட அதிக பிரீமியம் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

எச்.எஸ்.பி.சி. வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் எழுப்பியுள்ள கேள்விகள் மூலம் அரசி வெளிப்படைத்தன்மையற்ற கொள்வனவு முறை அம்பலமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலைப் பயன்படுத்தி ஏனைய நாடுகள் வரிகளைக் குறைத்து மக்களைப் பாதுகாக்கும் வேளையில், இலங்கை அரசு வரிகளை அதிகரித்து நுகர்வோரை வஞ்சிக்கின்றது என்றும் அவர் சாடினார்.

மேலும் "துறைமுக இறக்குமதி விலைக்கே எரிபொருள் தருவோம்" என வழங்கிய வாக்குறுதியை அரசு காற்றோடு பறக்கவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய சக்தி முதலீட்டாளர்களை அரசு விரட்டி வருகின்றது என்று தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் போது வெளிப்படையான கொள்வனவு கொள்கையை உருவாக்கி, மின்சார மற்றும் எரிபொருள் நுகர்வோருக்கு நேர்மையான சேவையை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now