New Updates! Fresh news just arrived.

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற பசுமை அமைதி விருதுகள் வழ...

News

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா!

April 27, 2026 3:37 pm
யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா!
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல்- 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசைக்கச்சேரி இடம்பெற்றது.

ஆண்டுதோறும் மாணவர்களிடையே தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் சூழல் பொது அறிவுப் பரீட்சை நடாத்தி பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதி சான்றிதழோடு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

சூழல் பொது அறிவுப் பரீட்சையில் முதலிடத்தை பிடித்து சூழலியல் ஆசான் க.சி குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளாக முதலாம் இடத்தைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்‌ஷிகா மதிவதனன் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த டிலுக்‌ஷினி டன்ஸ்ரன் வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றம்யா றமேஸ் மட்டக்களப்பு சென்.ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த அன்ரனி கிங்சிலி யனுசன் மன்னார் டி லா சால் கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்துராசா அன்ரனி டிலைக்சன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட மாணாக்கர் உழவர் வீட்டுத் தோட்டப் போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களும், தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டின் சிறந்த சூழல் நேயச் செயற்பாட்டாளர் விருதான தாலகாவலர் க.கனகராசா ஞாபகார்த்த விருதினை பல்லுயிர் நிறுவனரான சிவகுமாரன் நிரோசன் பெற்றுக் கொண்டார். சிறுதானிய பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு தேனீ வளர்ப்பு குறுங்காடுகள் உருவாக்கம் உட்படப் பல்வேறு சூழல்நேயப் பணிகளை ஆற்றிவரும் இவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ.முகமது சுல்பீக்கர் அபூபக்கர், இயற்கைவழிச் செயற்பாட்டாளர் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைப் பொதுச்செயலாளர் கை. சரவணனும், நன்றியுரையைப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ம. கஜேந்திரனும் ஆற்றியிருந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார். அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக விழா நடந்தேறியது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now