New Updates! Fresh news just arrived.

அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டம் ஆபத்தானது: சமூக செயற்...

News

அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டம் ஆபத்தானது: சமூக செயற்பாட்டாளர் இ.முரளிதரன் எச்சரிக்கை!

January 20, 2026 10:00 am
அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டம் ஆபத்தானது: சமூக செயற்பாட்டாளர் இ.முரளிதரன் எச்சரிக்கை!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கமானது கொண்டுவரும் புதிய சட்டமானது மிகவும் ஆபத்தானது என சமூக செயற்பாட்டாளர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கமானது மாசி மாதம் ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வருகின்றது. இது தற்போது இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தினை விட மிக மோசமான சட்டமாகவே காணப்படுகின்றது

குறித்த சட்டம் மக்களுடைய பார்வைக்காக வெளியிடப்பட்டு நீதி அமைச்சினால் மக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் குறித்த சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி ,நீதி அரசர்,பாதுகாப்பு அமைச்சர்.இவர்களினைத் தவிர வேறு யாரும் இது தொடர்பில் முடிவெடுக்க முடியாது எனவே, குறித்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டமாகவே காணப்படுகின்றது

400 பக்கங்களினைக் கொண்ட குறித்த சட்டம் மிக மோசமாக காணப்படுகின்றது நாங்கள் ஒரு ஊடக சந்திப்பினை கூட செய்ய முடியாத நிலைமை இந்த சட்டத்தில் காணப்படுகின்றது. இச்சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கையில் கருத்து சுதந்திரமானது பாதிக்கப்படும்.

குறித்த அரசாங்கமானது போராட்டங்கள் ஊடாகத்தான் ஆட்சியினை கைப்பற்றியது அந்த நிலை தன்னுடைய அரசாங்கத்திற்கும் ஏற்படும் என்பத்தினை தெரிந்துதான் இவ்வாறு ஒரு பயங்கரமான சட்டத்தினை கொண்டு வருகின்றது.

அரசாங்கத்தினை விமர்சிக்க தடை ஏற்படுத்தி அரசாங்கத்தினை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதற்காகவே குறித்த சட்டம் கொண்டுவரப்படுவதாக நான் கருதுகின்றேன். இந்தச் சட்டத்தினை எதிர்ப்பதற்கு தென் இலங்கையில் பொது அமைப்புகள் புத்துஜீவிகள் தயாராகி வருகின்றார்கள்.

வருகின்ற நாட்களில் பாரிய போராட்டத்தினை நீதி அமைச்சிற்கு முன்னால் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இந்த போராட்டமானது வடகிழக்கிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

குறித்த சட்டம் தொடர்பாக விழிப்புணர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைத்து மக்களும் இச்சட்டத்தில் இருக்கும் ஆபத்துக்கள் தொடர்பில் அறிய வேண்டும். நீங்கள் புதிய சட்டத்தினை வாசித்து விட்டு தனிநபராகவோ, அல்லது குழுக்களாகவோ குறித்த சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என நீதி அமைச்சுக்கு தெரிவியுங்கள்.

மோசமான சட்டத்தினை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றவேளை மிக வேதனையான விடயம் என்னவென்றால் எங்களுடைய தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் தலைவர்கள் குறித்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை இந்தச் சட்டத்தினை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கின்றார்கள்.

எனவே, தமிழ் தலைவர்கள் கொண்டுவரப்படட இருக்கும் மோசமான சட்டத்தில் இருக்கின்ற பாதிப்பினை மக்களுக்கு உணர்த்தி அதற்கு எதிராக போராட முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now