New Updates! Fresh news just arrived.

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: உள்ளூராட்சி...

News

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு!

May 7, 2026 9:45 pm
பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினுடைய வருமானப் பரிசோதகர் சபையின் உறுப்பினர் ஒருவரினை அவதூறான முறையில் சபையில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த வருமானப் பரிசோதகர், கௌரவ உறுப்பினர் ஒருவரினை அடாவடித்தனமான முறையில் வெளியேறுமாறு கூறியுள்ளார். இதன்போது, "உங்களுக்கு குறித்த அதிகாரத்தை வழங்கியது யார்?" என உறுப்பினர் வினவியபோது, சபையினுடைய செயலாளரே தமக்கு அனுமதி வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.

மேலும், "செயலாளர் எதனைக் கூறினாலும் அதனை நிறைவேற்றுவதே எனது கடமை" எனவும் அந்த உத்தியோகத்தர் சபையில் வாதிட்டுள்ளார். தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே குறித்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விதிமுறைகள் மீறல்
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கௌரவ உறுப்பினர்:


"பிரதேச சபை சட்ட விதிமுறைகளின்படி, ஒரு உத்தியோகத்தர் கௌரவ உறுப்பினர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என ஒழுக்கநெறி உள்ளது. சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி இருக்கின்றதா? அப்படி அனுமதி இருந்தாலும், உறுப்பினர்களினை வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? சட்டங்களினை நிலைநாட்ட வேண்டிய செயலாளரே இத்தகைய செயல்களுக்குத் துணையாக இருப்பதானது கண்டிக்கத்தக்கது."

குறித்த அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரான சுதர்சன் அவர்களுக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் கௌரவ ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சபை.
பாராளுமன்ற உறுப்பினரான ரஜீவன்.
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி, குறித்த விவகாரத்தில் முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் தவறு செய்திருந்தாலும், எனக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்ட உத்தியோகத்தர் மற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட செயலாளரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனவும் பாதிக்கப்பட்ட உறுப்பினர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now