New Updates! Fresh news just arrived.

அரச பாடசாலைகளில் பதில் அதிபர்கள் பிரச்சினை: ஜனாதிபதியிடம்...

News

அரச பாடசாலைகளில் பதில் அதிபர்கள் பிரச்சினை: ஜனாதிபதியிடம் தீர்வு கோரி வேண்டுகோள்!

May 4, 2026 3:09 pm
அரச பாடசாலைகளில் பதில் அதிபர்கள் பிரச்சினை: ஜனாதிபதியிடம் தீர்வு கோரி வேண்டுகோள்!
அரச பாடசாலைகளில் நீண்டகாலமாக கடமையாற்றி வரும் பதில் அதிபர்கள் தங்களது சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2026 ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களில், தற்காலிக, நாளாந்த, பதிலீடு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேவையில் உள்ள சுமார் 9,800 அரசு ஊழியர்களை நிரந்தரமாக்கும் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிறுத்தி, அதே கொள்கையின் அடிப்படையில் பதில் அதிபர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதில் அதிபர்கள் தெரிவித்ததாவது, 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்களது சேவை நிலைமை தொடர்பில் சரியான தீர்வுகள் எடுக்கப்படாமல் இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அதிபர் இல்லாத பாடசாலைகளை திறம்பட வழிநடத்தி வந்த போதிலும், சிலர் மீண்டும் ஆசிரியர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் பணியாற்றிவரும் பலர் இந்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றம், பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், பதில் அதிபர்களுக்கென தனிப்பட்ட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வயது வரம்பை கடந்தும் நீண்டகாலமாக சேவையாற்றியவர்களுக்கு குறித்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, மாகாண நிர்வாகங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் இது குறித்து பலமுறை எழுத்து மற்றும் நேரடி முறையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் இதுவரை உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதில் அவர்கள்து தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட கல்வி அமைச்சு அதிகாரிகளையும் நேரில் சந்தித்து தங்களது பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் கல்வி அமைப்பை நிலைநிறுத்துவதில் தங்களது பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்திய பதில் அதிபர்கள், தங்களது மனிதாபிமான மற்றும் தொழில்நிலை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now