New Updates! Fresh news just arrived.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலு...

News

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவலை!

September 5, 2026 7:28 am
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவலை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்துள்ள இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பல்வேறு கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் நபர்களை தடுத்து வைப்பது மற்றும் தன்னிச்சையான கைதுகள் இடம்பெறுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, விரைவில் அதனை நீக்குவதுடன், அதற்குப் பதிலாக சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு அமைவான புதிய சட்டத்தை உருவாக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மாற்றம், குறித்த சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழிகளின் பின்னணியிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக தன்னிச்சையான கைது நடவடிக்கைகளும், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாமல் நீண்டகால தடுப்புக் காவலும் இடம்பெற்றுள்ளதாக வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் காவலில் அல்லது தடுப்புக் காவலில் இருந்தபோது 18 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இதுபோன்ற மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே காலங்களில் சித்திரவதை மற்றும் கொடூரமான தாக்குதல்கள் தொடர்பாக 2025ஆம் ஆண்டில் 602 முறைப்பாடுகளும், 2026 ஏப்ரல் வரையில் 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள உயர்ஸ்தானிகர், கடந்தகால யுத்தத்துடன் தொடர்புடைய பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு இதுவரை போதுமான மற்றும் தொடர்ச்சியான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட இராணுவ மற்றும் சிவில் புலனாய்வு அமைப்புகளால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுதல் தொடர்பிலும் அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும், புதிய காணி சுவீகரிப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை மறுபரிசீலனை செய்து அவர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டம் ஆகியவற்றில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது அவற்றை இரத்து செய்யவோ அறிக்கை பரிந்துரைக்கிறது.

சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளை குறைப்பதற்கான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடையவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு சுகாதார அடிப்படையிலான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now