New Updates! Fresh news just arrived.

ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்ட 25 இலட்சம் டொலர் தொடர்பில் இத...

News

ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்ட 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை!

April 24, 2026 8:00 pm
ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்ட 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை!
நாடு இழந்திருக்கும் 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரைக்கும் எந்தவித உத்தியோகபூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி அமைச்சும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் ஒரு விதமான விளக்கமும், பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றுமொரு விதமான விளக்கங்களையும் முன்வைத்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு இந்த நிதி மோசடி தொடர்பிலான உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய கடன் தரப்பாளியாக வேடமிட்ட போலி நபராலா அல்லது உத்தியோகபூர்வ அவுஸ்திரேலிய கடன் தரப்பாளிகளாலா அல்லது நமது நாட்டு இலங்கை பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் அல்லது வெளிநாட்டு வெளி வளங்கள் திணைக்களத்தாலா ? யாரின் தவறு காரணமாகவா இந்த சம்பவம் இடம்பெற்றது என்பதை அறிய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த விவரங்களை, இது சார்ந்த தகவல்களை நாட்டிற்கு முறையாக தெரிவிக்க தற்போதைய அரசாங்கத்தால் இதுவரையிலும் முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேன, நா உயனே அரியதம்ம தேரரினுடைய 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்விவானது இன்று (24) விகாரை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்றதன் பிற்பாடு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி ஜனவரியிலேயே இந்த பிரச்சினை கண்டறியப்பட்டு பல மாதங்கள் இரகசியமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், ஜனவரியில் கண்டறிந்தும் மார்ச் வரை விசாரணைக் குழுவை ஏன் நியமிக்காமல் இருந்தீர்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது.

இந்த தகவல் வெளியாகும் வரை நிதி விடயங்களில் முக்கிய பொறுப்பை கொண்ட பாராளுமன்றத்திற்கு இந்த மோசடி குறித்து ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது மிகப் பாரதூரமான பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனில் ஜயந்த பிரதி அமைச்சர் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய அரசுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது நேர்ந்தது போலவே இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்களிலும் பணம் இழக்கப்பட்டிருந்தால் இதன் உண்மைத் தண்மையை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். பல மாதங்களாக இந்த விடயத்தை மறைத்து வைத்ததுக் கொண்டிருந்தது ஏன் என்பது பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இது மிகப் பாரதூரமான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நடந்த மோசடி சம்பவம் மிகவும் பாரதூரமானது. நமது நாடு பல இறையாண்மைப் பொறுப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ள ஒரு நாடாகும். இந்த பொறுப்புகளை நிறைவேற்றும்போது ஒரு நாடாக, ஒரு அரசாங்கமாக, நிதி அமைச்சாக வினைத்திறனற்ற முறையில் நடந்து கொண்டால், நாட்டைப் பற்றி சர்வதேசத்திற்கு மோசமான செய்தியே செல்லும்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகள், தொழில் முயற்சியாண்மைகள், பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் பேச்சுகளுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நாடாக சர்வதேசத்தில் எமக்கு இடமிருக்காது. இதனால் நாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை உலகிற்கு எம்மால் முன்வைக்க முடியாமல் போகின்றன. முதலீட்டு ஊக்குவிப்புக்கு இது தடையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிப்படையான விசாரணை சபையை நியமிப்பது இங்கு அரசாங்கத்தின் கடமையாக காணப்படுகின்றன. சர்ச்சைக்குரிய மோசடி நடந்த நிறுவனம், அதன் அதிகாரிகளை நியமித்து விசாரணை நியாயமாக நடத்த முடியாது. ஆகையினால் உண்மையான வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி இது தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். இந்த மோசடி திருட்டால் இந்த அரசாங்கம் இயலுமையற்ற அரசாங்கம் என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் சைபர் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாவிட்டால் நாட்டின் ஏனைய பாதுகாப்பு மற்றும் ஏனைய சைபர் பாதுகாப்புகள் தொடர்பில் நினைத்துப் பார்க்க முடியுமா? இந்நிலையில் ஜனாதிபதி உண்மையை பேச வேண்டும். இந்த சம்பவம் அரசாங்கத்தின் இயலாமையையும், வினைத்திறனில்லாத தன்மையையும், செயலற்ற தன்மையையும் நாட்டிற்கே காட்டிவிட்டது. ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்த ஸ்மார்ட் ஆட்சிக்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் இயலாமை மிக்க ஆட்சியையே நடத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now