New Updates! Fresh news just arrived.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக ஊழியர்களின் முப்பத...

News

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல் !

May 16, 2026 4:57 pm
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல் !
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் “Pearl Jubilee Anniversary” எனப் பெயரிடப்பட்ட விசேட முத்து விழா ஒன்றுகூடல் கடந்த 15ஆம் திகதி பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.ஏ.சி.எம். ஜுனைடீன் நெறிப்படுத்தினார்.

முப்பது ஆண்டுகளாக பல்கலைக்கழக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஸ்தாபக ஊழியர்களின் சேவைகளை நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஆரம்பகால சேவை அனுபவங்கள், பல்கலைக்கழக வளர்ச்சியின் மறக்கமுடியாத நினைவுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து பலரும் கருத்து பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வின்னுடைய முக்கிய அம்சமாக, ஸ்தாபக ஊழியர்கள் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் அவர்களினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளனர். இதன்போது, பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால சவால்கள், குறைந்த வளங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சேவைகள், மாணவர் மையப்படுத்தப்பட்ட பணியியல் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நினைவுகள் பகிரப்பட்டன.

உபவேந்தர் தனது உரையில், பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்திய ஸ்தாபக ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டியதுடன், ஆரம்பகால வரலாறுகள் மற்றும் அனுபவங்கள் எதிர்கால தலைமுறைகளுக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உரையாற்றுகையில், “ஒரு கல்வி நிறுவனம் என்பது கட்டிடங்களால் மட்டும் உருவாகாது; அதில் பணியாற்றும் ஊழியர்களே அதன் உண்மையான பலம்” எனக் குறிப்பிட்டார். மேலும், ஓய்வு பெற்ற மற்றும் விலகிச் சென்ற முன்னாள் ஊழியர்களையும் இணைக்கும் வகையில் விசேட அமைப்பு ஒன்றை உருவாக்கும் யோசனையையும் வரவேற்றார்.

நிகழ்வின் தலைமை உரையாற்றிய எஸ்.எல்.எம். தாஹீர், பல்கலைக்கழகத்தின் தற்போதைய உயர்வில் தங்களுக்கும் ஒரு சிறிய பங்களிப்பு இருப்பது பெருமையளிப்பதாகக் குறிப்பிட்டதுடன், பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இதேவேளை, ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான எம்.எச்.எம். ஹலீம் உரையாற்றுகையில், இந்த ஒன்றுகூடல் எதிர்கால தலைமுறைகளையும் இணைக்கும் குடும்ப உறவாக வளர வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் உருவாக்கப் பயணம் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now