New Updates! Fresh news just arrived.

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் தாக்கல் செய்த ...

News

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் தாக்கல் செய்த ரிட் மனு: விசாரணைக்கான திகதி அறிவிப்பு!

March 3, 2026 8:48 pm
பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் தாக்கல் செய்த ரிட் மனு: விசாரணைக்கான திகதி அறிவிப்பு!
எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தாக்கல் செய்த ரிட் மனுவை, விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மார்ச் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபயசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இந்த வழக்குத் தொடர்பில் தாம் சில அவதானிப்புகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும், இந்த மனு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், இந்த வழக்கு தொடர்பான முழுமையான அவதானிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதற்கான கால அவகாசத்தை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.

மேலும், வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க அனுமதி வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ருக்ஷான் சேனாதீரவுடன் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இந்தக் கோரிக்கைக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனக் கூறினார்.

தனது சேவைபெறுநரின் நியமனம் மற்றும் ஒழுக்காற்று அதிகாரி பாராளுமன்ற செயலாளர் நாயகம் எனவும், அவரைப் பணி இடைநிறுத்தம் செய்வதற்கு பாராளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு அதிகாரமில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

அத்துடன், அவரது பணி இடைநிறுத்தம் சம்பளமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது முற்றாக சட்டத்திற்கு முரணானது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன இங்கு சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மார்ச் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போது, அவற்றை மனுதாரர் தரப்புக்கும் ஏனைய பிரதிவாதிகளுக்கும் அறிவித்தல் வழங்கி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.

இந்த ரிட் மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட 14 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now