இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்த்துள்ளார்.
இதன்படி,அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 20வது ஆசியாவின் முன்னணி பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue சிங்கப்பூரில் ஜூன் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஜூன் 2ஆம் திகதி தொடங்கிய இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையுரை ஆற்றியதோடு இதில் இந்தியா, ஓமன், பிரான்ஸ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முன்னணி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நிலையான மற்றும் சமநிலையான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குதல், பிராந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான புவிசார்-அரசியல் விவகாரங்களில் குறித்த மாநாடு கவனம் செலுத்தியது.
மேலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மையமாக வைத்து தனது உரையை ஆற்றிய சாகல ரத்நாயக்க, இந்து சமுத்திரப் பகுதியை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மேற்கொண்ட முயற்சிகளையும் விளக்கினார்.
இதேவேளை, பெரும் வல்லரசுகளின் போட்டி மற்றும் வெளி மோதல்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கப்பல் மற்றும் விமானப் பயண சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் பங்களிப்பையும் விளக்கினார்.
அத்தோடு, ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உட்பட பல உயர்மட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சாகல ரத்நாயக்க ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதியளித்த சாகல ரத்நாயக்க, கடந்த சவாலான காலகட்டத்தில் சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் துறைமுகம் மற்றும் தளவாடத் துறைகள் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் பரந்த கவனம் செலுத்தப்பட்டதுடன் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் கிரெக் மொரியார்டி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலில் கடல்சார் பாதுகாப்பு, மனித கடத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் கூட்டுப் பணியாளர் குழுவின் தலைவர் ஜெனரல் சஹீர் ஷம்ஷாத் மிர்சா மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பிராந்தியத்தை மேம்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு சாகல ரத்நாயக்க மற்றும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் அக்விலினோ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், இது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் சாகல ரத்நாயக்க விளக்கமளித்துள்ளதுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டின் சிபொல்லாவுடன் இடம்பெற்ற சந்திப்பில், பிராந்தியம் தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அர்ப்பணிப்பையும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.
இதேவேளை, சாகல ரத்நாயக்க மற்றும் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிசிறி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தொடர்பில் பரவலாக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen நடத்திய இரண்டு வட்ட மேசைக் கலந்துரையாடல்களிலும் சாகல ரத்நாயக்க பங்கேற்றதுடன் மேலும் 29 அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஷங்கிரி-லா உரையாடலில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.