இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையானது, அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனமான TIKAவிடமிருந்து பெற்றுக்கொண்டது.
இந்தக் கையளிப்பு நிகழ்வு (08) வெள்ளிக்கிழமை அன்று வைபவரீதியாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழிநுட்ப பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் ஆர். கே. றிபாய் காரியப்பர், சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் துறைத்தலைவருமான கே.எம். றிப்தி உட்பட உட்பட பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் TIKAவினுடைய பிரதிநிதிகளான செவ்கி மெர்ட் பாரிஸ், ஜெய்னெப் பைராக் மற்றும் ஓயா துதுன்சு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். .
இந்த நிகழ்வில் பேசிய உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், இந்த நன்கொடை இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும் என்று குறிப்பிட்டார். இந்த உபகரணங்கள் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், சவால்களைத் தீர்க்கவும் உதவும் என்று அவர் கூறினார்.
TIKA நிறுவனத்தின் பிரதிநிதிகள், இந்த நன்கொடையானது இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதை அடையாளப்படுத்துகிறது என்று குறிப்பிட்டனர். மேலும், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் இந்த நன்கொடையானது மாற்றியமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
குறித்த கூட்டு முயற்சியின் வெற்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் உதவும் என்று உறுதியாக நம்பலாம்.
ஊடகப் பிரிவு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.