சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் சிகரெட்டுகள் இன்று (15) காலை முத்துராஜவெல கழிவு ஆற்றல் அனல் மின்நிலையத்தில் அழிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் சிரேஷ்ட ஒழுங்குமுறை அதிகாரிகள் முன்னிலையில் குறித்த சிகரெட் கையிருப்பு அழிக்கப்பட்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,குறித்த சிகரெட் கையிருப்பின் மூலம் அரசாங்கத்திற்கு நட்ட வருமானம் 13 பில்லியன் ரூபா எனவும், சிகரெட் கையிருப்பின் பெறுமதி 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த சிகரெட் தொகை இலங்கை சுங்கத்தின் இணக்கம் மற்றும் வசதிகள் திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டத்தோடு சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதியாளர்கள் மற்றும் பிற தரப்பினருக்கு அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், அவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.