உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ருமேனியாவின் இராஜாங்க செயலாளரும் பிரதி வெளிவிவகார அமைச்சருமான ட்ரேயன் ஹிரிஸ்டீயா உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர்.
இதன்படி, ருமேனியாவில் இலங்கைத் தூதரகத்தை நிறுவுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள இராஜாங்கச் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான உறவை ஏற்படுத்த இது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தொழிலாளர் துறை, கல்வி, வர்த்தகம், முதலீடு, இணைய பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா என பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையர்களுக்கு ருமேனியாவில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கை – ருமேனிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.