
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான சாந்தன் என்கிற டி.சுதேந்திரராஜா, அவரை இலங்கைக்கு நாடு கடத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்வதிலிருந்து அக்டோபர் 9, 2023 திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் விலகினார்.
இதன்படி, குறித்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் பட்டியலிடப்பட்டபோது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் இணைக்கப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞராக இருந்ததால் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார்.
எனவே, வழக்கை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அத்தோடு, மனுதாரர் தனது வழக்கறிஞர் பி. புகழேந்தி மூலம் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், தான் இலங்கைப் பிரஜை என்றும், அதனால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம், 1946-ன் கீழ் சிறப்பு முகாமில் (வெளிநாட்டவர்கள் தடுப்பு மையம்) தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வரை சிறப்பு முகாமின் எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 11, 2022 அன்று உத்தரவு பிறப்பித்ததாக சாந்தன் தெரிவித்ததோடு யாழ்ப்பாணம் வல்வெட்டியில் வசிக்கும் தனது 75 வயதுடைய தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதால், தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அளித்த மனுவைக் குறிப்பிட்ட அவர், தனது பிரதிநிதித்துவங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்: தி இந்து