பிறந்த குழந்தைகளின் தாய் உட்பட இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது ஒரு வாரமான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராகம மற்றும் களனியைச் சேர்ந்த மேலும் இரு பெண்கள் குழந்தைகளை ‘கொள்முதல்’ செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த அநாமதேய இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைக்குழந்தைகளின் தாய், ராகம மற்றும் களனியில் உள்ள இரண்டு பெண்களிடம் தலா 25,000 ரூபாவுக்கு சிசுக்களை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர்கள் மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.