வங்கி வட்டி விகிதம் எதிர்காலத்தில் மேலும் குறையும் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.ஜி.கே. எதிரிசிங்க தெரிவித்தார்.
இதன்படி, மத்திய வங்கியில் கடன் வாங்குவதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் தொழிற்சங்க உறவுகள் பிரிவின் ஏற்பாட்டில் ‘பட்ஜெட் – 2024’ தொடர்பான விழிப்புணர்வு மாநாட்டுத் தொடரின் 6வது மாநாடு அண்மையில் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாட் வரி அதிகரிப்பால் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியுள்ள போதிலும், இறக்குமதியில் பெரிய அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும், ஒரு மாதத்தில் ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் ரூபாவாகும் எனவும் பிரதிப் பணிப்பாளர் ஈ.ஜி.கே. எதிரிசிங்க குறிப்பிட்டார்.
அத்தோடு, இம்மாத இறுதிக்குள் நாட்டின் டொலர் கையிருப்பு நான்கு பில்லியனைத் தாண்டும் எனவும், சந்தையில் இருந்து அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்து வெளிநாட்டு கையிருப்பின் அளவை அதிகரிக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.