சர்ச்சைக்குரிய வகையில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உட்பட ஆறு சந்தேகநபர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் 2024 ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த சந்திரகுப்தா டிசம்பர் 18 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, டிசம்பர் 14 அன்று, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, ‘தரமற்ற’ மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) தொகுதியை கொள்வனவு செய்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியது என நீதிமன்றம் கருதுவதாக அறிவித்தார்.
இதனால், பொதுமக்களுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கியமை தொடர்பில் நீதி வழங்குவதற்காக, பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் கைது செய்து, பதவி வேறுபாடின்றி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அதே பிரிவைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகள் மற்றும் தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் தொடர்புடைய நிறுவனதின் உரிமையாளர் உட்பட பல முக்கிய நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.