கொழும்பு காஜிமாவத்தையில் வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தின் வீடமைப்புக் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு இணங்கவே இந்த வேலை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு காஜிமாவத்தையில் உள்ள வீட்டுப் பிரச்சினை தொடர்பாக நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு மாநகரப் பகுதிக்குள் பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் காணிகளை அபிவிருத்தி மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பொதுத்துறையின் தலையீட்டுடன், தனியார் முதலீடுகள் மூலம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கொழும்பு நகர எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மீளாய்வு செய்து, மேலதிக முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சவால்கள் இருந்தாலும், மேலும் திட்டங்களுக்கு பொருத்தமான அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. சத்தியானந்தா, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் லைன் நிறுவனங்களின் அதிகாரிகள், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.