பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சி தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு இன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, அவர் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவுகளை ஊடகமொன்று வெளிப்படுத்திய நிலையில் குறித்த ஒலிப்பதிவு தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த விவாதங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில் பாதாள உலக உறுப்பினர் என கூறப்படும் அல்டோ தர்மாவுக்கும் அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அவதானம் செலுத்தியுள்ளார்.
அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சி, மவுன்ட் கில்டேர் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காலப்பகுதியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாககுறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒலிப்பதிவு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சி பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் தொலைபேசி என்பன ஏற்கனவே பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும், குறிப்பிட்டுள்ளது.