இன்றைய புனித வெள்ளி மற்றும் எதிர்வரும் ஈஸ்டர் ஞாயிறு தினங்களை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகிய நாட்களில் ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பெருமளவான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் பொலிஸ் களத்தில் அமைந்துள்ள 2,978 கிறிஸ்தவ தேவாலயங்களில் 2,239 தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, அந்த தேவாலயங்கள் உட்பட 2,253 தேவாலயங்களின் பிதாக்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடி விசேட பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இதற்காக பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முப்படை அதிகாரிகளின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.