தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட 306 C2, லியோ கிளப் மற்றும் லியோ தினத்திற்காக 6,500 உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்யும் வைபவம் கொழும்பு றோயல் கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள போதிலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக நாட்டை பொறுப்பேற்க முன்வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய தினத்தைப் பற்றி சிந்திக்காமல், 25 வருடங்கள் முன்னோக்கி யோசித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அபிவிருத்தியடைந்த நாட்டை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு இளைஞர்களுக்கு உதவுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்படி, நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கவும் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து “தேசிய இளைஞர் தளம்” உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு உதவும் வகையில் இளைஞர் மேடை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.