பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிதியமைச்சில் இன்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
எனவே டொலருடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தைப் பொருட்களின் விலை குறைய வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, விலை குறைக்கப்படாவிட்டால் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.