அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை காலத்தில் பரீட்சை நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
இதன்படி, பரீட்சை நிலையங்களில் ஒழுக்கமற்ற மற்றும் கலவரமாக நடந்து கொண்ட பரீட்சார்த்திகளின் தகவல்களுடன் அறிக்கைகளை வழங்குமாறு மண்டப முதுநிலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்தோடு. பரீட்சை நிலையங்களில் ஒழுக்கமற்ற மற்றும் கலவரமாக நடந்துகொண்ட பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ர்த்துள்ளதுடன் இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பில் தமக்கு ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பரீட்சை மையங்களில் ஒழுக்கமற்ற மற்றும் கலவரமாக நடந்து கொள்வது பாரதூரமான குற்றம் எனவும் இவ்வாறு பரீட்சை எழுதியவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, பரீட்சை நிலையங்களில் ஏனைய பாடசாலைகளின் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பரீட்சை முடியும் வரை இது தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், ஆனால் பரீட்சை முடிவடைந்த பின்னர், தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.