விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் அடுத்த பருவத்தில் இலங்கையில் 16,000 ஹெக்டேயர் சோளத்தை பயிரிட ஒப்புக்கொண்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறிய அளவிலான விவசாய-தொழில்முனைவோர் பங்கேற்பு திட்டம் தேவையான ஆதரவை வழங்கும் என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருமான ஷெரினா தபசும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து இது தொடர்பான திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளயதோடு நாட்டில் கால்நடைத் தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் சோளப் பயிர்ச் செய்கை திட்டத்திற்காக 16,000 ஹெக்டேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த பருவத்தில் அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சென்றடையும் வகையில் சோள திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும்
இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு உயர்தர கலப்பின விதைகள், இரசாயன உரங்கள், நிலம் தயாரிக்கும் வசதிகள் மற்றும் நிதி வசதிகள் என்பன வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இந்நாட்டின் கால்நடை வள அபிவிருத்திக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் குறித்த கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதோடு விவசாய அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதியுதவியுடன் புதிய திட்டமான விவசாயத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளை குறைக்கும் திட்டத்தின் கீழ் இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.