இஸ்லாமிய மத தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மற்றும் புனித அல் குர்ஆனுக்கு எதிராகவும் அவதூறான கருத்துகளினை பதிவிட்டமைக்காக யூடியூப்பரும் ஜோதிடருமான இந்திக தொட்டாவத்தவிற்கு என்.எம்.தாஜுடீன் என்பவர் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாட்டினை செய்திருந்த நிலையில் யூடியூப்பரும் கணனி குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, 29 செப்டம்பர் 2023 அன்று sathya vlogs என்கின்ற யூடியூப்(ஜோதிடர்) சேனலில் குறித்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றி இருந்த நிலையில் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) போன்ற பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்ட வத்தவுக்கு எதிராக குறித்த புறப்பாடு முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த சட்டக் கோவையானது பிணையில் விட முடியாத மற்றும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படக் கூடியதுமான தவறுகளாகும் என்பதோடு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, முறைபாட்டாளருடன் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களது அறிவுறுத்தலின் கீழ் சட்டத்தரணிகளான ஷைனாஸ் முஹம்மத் மற்றும் எம் .கே .எம். பர்ஷான் ஆகியோர் பிரதான பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரினை சந்தித்து குறித்த முறைப்பாட்டுடன் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர் .
மேலும், இது சம்பந்தமாக சட்ட முறையான நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என்ற பொலிஸ் தலைமையகம் உறுதியளித்த நிலையில் இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.