பிரபல பாதாள உலக நபரான “ஹரக் கட்டா” அண்மையில் தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தருகின்றவர்களுக்கு 2.5 மில்லியன் ரூபா இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேற்படி, முனிபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற குறித்த பொலிஸ் அதிகாரி செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் தலைமறைவாக உள்ள நிலையில் குறித்த அதிகாரி பற்றிய எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் பின்வரும் தொடர்பு எண்களான: 071 8596150 அல்லது 071 8591960 வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செப்டம்பர் 10 ஆம் திகதி, எட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட “ஹரக் கட்டா”, தனது விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் உதவியுடன், அதிகாரிகளின் தேநீரில் விஷம் கலந்ததாகக் கூறப்படுவதோடு தப்பிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற குறித்த ஹரக் கட்டாவிற்கு உதவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கான்ஸ்டபிள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வளாகத்தை விட்டு தப்பிச் சென்று இன்றுவரை தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 18 ஆம் திகதியன்று, குறித்த கான்ஸ்டபிளின் தாய் மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விசாரிக்க 90 நாள் காவலையும் பொலிஸார் பெற்றுள்ளதுடன் மற்றொரு கான்ஸ்டபிள் பிரபல பாதாள உலக நபரான “ஹரக் கட்டா” தப்பிக்கும் முயற்சியில் உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் செப்டம்பர் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.