இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஏற்பாட்டின் முதல் மீள்பார்வையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை மற்றும் ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையானது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவுபடுத்தும் அதே வேளையில் பலதரப்பு கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தீர்க்க உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் இந்த பணியாளர் மட்ட ஒப்பந்தத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இலங்கை இரண்டாவது தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறத் தயாராக உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை 20 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக அடைந்தோம், இது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மூலம் சர்வதேச நாணய நிதியத்துடனான எங்கள் ஒப்பந்தத்தின் கீழ் இரண்டாவது தவணையைப் பெற்றுக்கொள்வதில் ஒரு முக்கியமான படியாகும். இந்த சாதனைக்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கையில் இரண்டு வாரங்கள் விரிவான மீளாய்வை நடத்தியதுடன், பல்வேறு தலைப்புகளில் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் விவாதங்களின் சிக்கலான தன்மை மற்றும் வீச்சு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியமில்லை என தெரிவித்திருந்தது.
“இதனைத் தொடர்ந்து, மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் போது நாங்கள் எங்கள் விவாதங்களை தொடர்ந்தோம். அங்கு பல்வேறு அம்சங்களை தெளிவுபடுத்தும் வகையில் ஆழமான விவாதங்களில் ஈடுபட்டோம். அப்படியிருந்தும், இலங்கைக்கு திரும்பியவுடன் இணைய தளத்தின் மூலம் தொடர்ந்து விவாதங்களை நடத்துவதற்கு வழிவகுத்து, பல்வேறு விடயங்களில் மேலதிக விளக்கங்களைப் பெற்றுவது சர்வதேச நாணய நிதியம், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் உரையாடல்களின் விளைவாக இந்த ஒப்பந்தம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச் 2023 இல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும், சமீபத்திய வாரங்களில் அடுத்தடுத்த இடையூறுகள் மற்றும் தவறான விளக்கங்கள் எழுந்தன. இராஜாங்க அமைச்சர் சேமசிங்க வலியுறுத்துகையில், “செயற்குழுவின் அங்கீகாரம் அல்லது இரண்டாவது தவணையை விடுவிப்பது குறித்து அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என நாங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திட்டவட்டமாக கூறியுள்ளோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் எங்கள் நம்பிக்கையைப் பேணினோம் என தெரிவித்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் உடனான வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு நிறைவடைந்ததைக் குறிக்கும் பணியாளர் மட்ட உடன்படிக்கையானது, பலதரப்புக் கடனாளிகளுக்கு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை சேமசிங்க அடிக்கோடிட்டுக் காட்டியதோடு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தை அடுத்து இலங்கை இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற உள்ளது எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அத்தோடு, குறித்த முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும், அத்துடன் இந்த சாதனைகளை சாத்தியமாக்குவதில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளின் பங்களிப்புகளையும் பாராட்டியுள்ளதோடு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற பலதரப்பு நிதி நிறுவனங்கள் மீதமுள்ள பணம் செலுத்த, சர்வதேச பங்காளிகளுடன் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளை மேலும் விரைவுபடுத்துவதற்கு ஊழியர் அளவிலான ஒப்பந்தம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஊழலைக் குறைத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது போன்ற அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இணங்கி, கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகள் விரைவில் இறுதி செய்யப்படலாம் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துடன் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை மேற்கோள் காட்டிய அவர், இது நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் மீதான சர்வதேச நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.