முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று ( 01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைது செய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வழங்குமாறு தனது எல்லைக்குட்பட்ட அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததாகவும், இதன் காரணமாக தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோரவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.