தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், இன்று (02) பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 5:30 மணியளவில் அட்சரேகை 10.5°N மற்றும் தீர்க்கரேகை 84.1°Eக்கு அருகில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 380km தொலைவில் அமைந்திருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (03) புயலாக மாறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பு திங்கள்கிழமை (டிச.04) இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதக்கவும் இது ஒரு சூறாவளி புயலாக வடக்கு நோக்கி நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதற்கிடையில் ஏற்கனவே மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.