மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் செவ்வாய் (19) மற்றும் புதன்கிழமை (20) ஆகிய இரு தினங்களிலும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநரின் இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்ட புதிய இடமாற்ற நடைமுறையின் பிரகாரம், பல பணியாளர்கள் கோரிக்கைகளை மீறி சுகாதார திணைக்களத்திலிருந்து சில நபர்களின் விருப்பத்திற்கேற்ப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
“இதுவரை எங்களின் இடமாற்றங்கள் ஸ்தாபனச் சட்டத்தின்படி சுகாதாரத் திணைக்களத்திற்குள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இம்முறை சுகாதாரத் திணைக்களத்திலிருந்து சில குழுக்களின் விருப்பத்திற்கேற்ப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளோம். 15 சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் ஜனவரி 01, 2024 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தொழிற்சங்கங்கள் இன்று (19) கொழும்பு மற்றும் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொலைத்தொடர்பு சேவைகள் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு அதன் தலைவர் தலைமையிலான பணிப்பாளர் சபை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.