மாத்தறை சிறைச்சாலையில் பல கைதிகள் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைமை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை சிறைச்சாலையில் 17 கைதிகள் சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து, அவர்களில் ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், மாத்தறை சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்த சிறைத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த 48 மணித்தியாலங்களில் சிறைச்சாலையில் இதே போன்ற அறிகுறிகளுடன் கூடிய கைதிகள் அடையாளம் காணப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 கைதிகளில் 02 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வைத்தியசாலையின் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதுடன் கைதிகளின் உடல்நிலை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் இன்னும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.